1. Home
  2. தமிழ்நாடு

பாஜக போராட்டம் திடீர் ரத்து..! காரணம் இதோ..!

1

அக்டோபர் 11 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "2018 ஆம் ஆண்டு. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் முயற்சியால், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பெற்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது. கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல், திட்டமிட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

தன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து இதுவரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத திமுக, சட்டசபையில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று சொல்லி, ஒரு கண்துடைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தன் வழக்கமான தீர்மான நாடகத்தை திமுக, திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறது. சட்டசபை விவாதத்தில், அத்தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி. பாஜக சட்டமன்ற உறுப்பினரான அக்கா திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் பேசியபோது அவரை முழுவதுமாகப் பேச விடாமல் குறுக்கீடு செய்வதும், ஒலிபெருக்கியை நிறுத்துவதும், அவரின் கருத்துக்களை மக்களிடத்தில் செல்ல விடாமல் ஒளிபரப்பை தடை செய்வதும் ஜனநாயகப் படுகொலையாகும்.

இவற்றுக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயற்சிக்காமல், வீண் நாடகமாடி நீண்டகாலமாக தமிழக மக்களை, திமுக ஏமாற்றி வருகிறது. கர்நாடகா அணைகளில் 80% த்திற்கும் அதிகமாக தண்ணீர் இருந்தும் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் திமுக அரசின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தண்ணீரைப் பெற்றுத்தர திறனின்றி நடத்துகின்ற போராட்டம் கண்டனத்துக்குரியது. ஆட்சியில் உள்ள மாநில அரசு, தண்ணீரைத் தர மறுக்கும், தன் கூட்டணிக் கட்சியைப்பற்றி எதுவும் பேசாமல் மத்திய அரசைக் குறை கூறுவது, ஆளும் கட்சியின் திறமையின்மையைக் காட்டுகிறது.

பாஜகவின் சார்பிலே டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக, கும்பகோணத்தில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி திங்கட்கிழமையன்று, ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இந்த உண்ணா நோன்பு போராட்டத்தை முன்னாள் அமைச்சர் தலைவர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைக்க, மாநிலப் பொதுச் செயலாளர் திரு.கருப்பு முருகானந்தம் அவர்களின் தலைமையிலே, கும்பகோணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தங்களின் கூட்டணிக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், அரசுமுறை நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அரசியல் லாபங்களுக்காக, நாடகமாடும் திமுக, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது. தொடரும் திமுகவின் துரோக வரலாற்றைத் தோலுரித்துக் காட்ட 16-10-2023 அன்று கும்பகோணத்தில் நடத்தப்படும். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், உண்ணாவிரத போராட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் "வரும் 16ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மிகப்பெரிய அளவில் கும்பகோணத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். தற்போது கர்நாடக அணைகளில் இருந்து படிப்படியாக நீர் திறப்பு குறைக்கப்பட்ட தற்போது 3000 கன அடி நீர் திறக்கப்படுவதால் இந்த நேரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது சரியாக இருக்காது என மாநில தலைவர் அண்ணாமலை கூறியதன் அடிப்படையில் அவர் உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வையுங்கள் என சொன்னதன் காரணத்தினால் தற்காலிகமாக இந்த போராட்டமானது ஒத்திவைக்கப்படுகிறது. காவிரியில் இருந்து கர்நாடக அரசு உரிய நீர் திறக்காவிட்டால் தமிழக பாஜக மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும்" என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like