1. Home
  2. தமிழ்நாடு

அருணாச்சலில் ஆட்சியை தக்க வைத்தது பா.ஜ.க. - சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி

1

சிக்கிம் மற்றும் அருணாச்சலப்பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.வும், சிக்கிம் மாநிலத்தில்  சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கின்றன. 

அருணாச்சலப் பிரதேசத்தை பொறுத்த வரை பா.ஜ.க. போட்டியின்றி தேர்வான 10 தொகுதிகளின் வெற்றியுடனேயே தனது கணக்கைத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது, தொடர்ந்து பெரும்பான்மையைத் தாண்டி முன்னிலை வகித்து வந்தது. 

இறுதியாக மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் 46 தொகுதிகளில் வென்று அருதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்.பி.இ.பி) 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும்  இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. அங்கு அருணாச்சல் மக்கள் கட்சி (பி.பி.ஏ.) இரண்டு இடங்களிலும், தேசிய காங்கிரஸ் கட்சி (என்.சி.பி.), சுயேட்சைகள் தலா மூன்று இடங்களிலும். காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இதனிடையே அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பதை வரவேற்றுள்ள பிரதமர் மோடி,  தனது டுவிட்டர் பக்கத்தில், 

அருணாச்சாலப்பிரதேச மக்களுக்கு நன்றி.  அந்த அருமையான மாநிலத்தின் மக்கள் வளர்ச்சி அரசியலுக்கான உறுதியான ஆணையினை வழங்கியுள்ளனர். 

பா.ஜ.க. மீது அருணாச்சல் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு எங்கள் கட்சி இன்னும் வீரியத்துடன் பணியாற்றும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க. தொண்டர்களின் கடின உழைப்பினையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 தொகுதிகளில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 31 இடங்களில் வென்று இமாலய வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. சிக்கிம் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் எஸ்.கே.எம். கட்சிக்கும், எதிர்க்கட்சியான பவன் குமார் சாம்லிங்கின் எஸ்.டி.எப் கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலைவியது.

இரு கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. பா.ஜ.க.வும், காங்கிரசும் அங்கு வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. பா.ஜ.க. 31 வேட்பாளர்களையும், காங்கிரஸ் கட்சி 12 வேட்பாளர்களையும், சிட்டிசன் ஆக்ஸன் பார்ட்டி - சிக்கிம் கட்சி 30 வேட்பாளர்களையும் நிறுத்தி இருந்தன.

மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான எஸ்.கே.எம். கட்சி 17 இடங்களிலும், எதிர்கட்சியான எஸ்.டி.எப் 15 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. 

கடந்த சட்டசபை தேர்தல் மாநிலத்தில் அதுவரை நடந்து வந்த எஸ்.டி.எப் கட்சியின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like