1. Home
  2. தமிழ்நாடு

அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் செய்து அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது - உடைத்துப் பேசிய மு.க.ஸ்டாலின்..!

Q

மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் ஜூன் 1ஆம் தேதி மதுரையில் திமுக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திமுகவின் கட்டமைப்புதான் நமது பலம். இதுபோன்ற நிர்வாகக் கட்டமைப்பு வேறு எந்த கட்சியிலும் இல்லை. நிர்வாக கட்டமைப்பை காலம்தோறும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறோம். பாஜக தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்காக அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் செய்து அதிமுகவை அடக்கிவிட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளா விட்டால் சொந்தக் கட்சியில் தனது தலைமை பதவிக்கே சிக்கல் வந்துவிடும் என்று பயப்படுகிறார். ஆகவே, பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டுவிட்டார். நாம் எல்லா காலத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட கட்சிதான். பாஜகவின் அச்சுறுத்தல்களை நாம் அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைக் காட்டிலும் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு ஊராட்சியாக, வார்டு வாரியாக செல்ல வேண்டும். வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றிபெறும் நபரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களின் கடமை” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு காரணம் நிர்வாகிகளும், தொண்டர்களும் தான். அந்த நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்” என்றும் ஸ்டாலின் பேசினார்.

Trending News

Latest News

You May Like