பாஜக கோரிக்கை : தீபாவளிக்கு 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு லீவு விட வேண்டும்.!

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "பார்" கலாச்சாரமும், ரவுடிகளின் "வார்" கலாச்சாரமும் மேலோங்கும் சாராய சாம்ராஜ்யமாக தமிழகம் மாறி வருவது ஆபத்தானது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும், போலி மது விற்பனை கட்டுப்படுத்த வேண்டும். 24 மணி நேர சட்ட விரோத பார்கள் தடுக்கப்பட்டு நடத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்ன பாஜக தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை ஊக்குவிக்க கூடாது. படிப்படியாக டாஸ்மார்க் கடைகள் குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் இந்த உத்தரவு (விற்பனையை அதிகரிக்க இலக்கு வைத்திருப்பதாக வெளியான தகவல்) லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு, துயரத்தை தரக்கூடிய, அவர்களின் சேமிப்பை கரைக்கக் கூடிய, குறிப்பாக தீபாவளி போனஸ் சமயத்தில் கிடைக்கும் பெருந்தொகையால் ஏழை நடுத்தர குடும்பங்களில், தங்களின் குடும்பத்துக்கு தேவையான, குறிப்பாக குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு தேவையான, திருமணத்திற்கு காத்திருக்கும் பெண் குழந்தைகளுக்கு தேவையான அவசியமான பொருட்களை வாங்கும் நேரத்தில், அந்தப் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுவது கொடுங்கோல் அரசாங்கம் நடத்துவதற்கு இணையானது.
ஏற்கனவே டாஸ்மாக் நிறுவன கொள்ளையால் பாதிக்கப்பட்ட தமிழக தாய்மார்கள், தீபாவளி சிறப்புமது விற்பனை இலக்கால் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. ஏழை நடுத்தர மக்களின் வாழ்வியல் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு, தீபாவளி பண்டிகை திரு நாட்களில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலையிட்டு வரும் தீபாவளி பண்டிகை திருவிழா காலமான அக்டோபர் 30, 31, நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட வேண்டும். மதுவிலக்கு மாநாடு என்று ஆரம்பித்து விடுதலை சிறுத்தை கட்சிகளின் மகளிர் மாநாடாக நடத்தி, கடைசியில் பாஜக எதிர்ப்பு மாநாடாக முடித்த அண்ணன் திருமாவளவன் இதுகுறித்து தமிழக அரசை கண்டிப்பாரா?
தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை என்று ஆயிரம் ரூபாய் நம் வீட்டிற்கு கொடுத்து, தமிழக அரசின் டாஸ்மாக் உரிமைத்தொகை என நம்மிடமிருந்து, மாதம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து வருவதை தமிழக மக்கள் உணர வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து மக்கள் விரோத அரசாக மாறி, மகளிர் வாழ்க்கையை சீர்குலைக்கும் அரசாக மாறி வருவதை உணர்ந்து, தமிழக மக்கள் அனைவரும் அரசியல் விழிப்புணர்ச்சி அடைய வேண்டும். தங்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்களுக்கு துணை நிற்க வேண்டும்." இவ்வாறு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.