வினோத திருவிழா : பெண் வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற திருவிழா..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/51946337ee5e2da8efd869cd7eac900e.jpg?width=836&height=470&resizemode=4)
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டகுளக்கரை ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறையாக சமய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் முதலில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்து கொண்டதால் ஆண்களும் பெண்கள் போல் வேடமிட்டு வழிபாடுகள் செய்யவும் தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து 40,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த கோவிலுக்கு வந்து பெண்கள் போல் வேடமணிந்து சமய விளக்கு என்னும் சடங்கை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான ஆண்கள், பட்டுப்புடவை, தாவணி அணிந்து அழகான தோற்றத்தில் கையில் விளக்கை ஏந்தி அம்மனுக்கு வழிபாடு நடத்தினர். இதன்மூலம் தங்கள் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இவர்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்காகவே ஏராளமான ஒப்பனை கலைஞர்களும் அந்த பகுதியில் குவிந்தனர். தன்னுடன் வரும் தன்னுடைய மனைவியே தன்னை பார்த்து ஆச்சரியம் அடையும் அளவில் இவர்கள் அலங்காரம் அமைந்திருந்தது.
வேண்டுதலுக்காக வருபவர்களும், வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்தி கடனை செலுத்துவதற்கு வருபவர்களும் ஒரே இடத்தில் கூடி அம்மனை வழிபட்டனர்.