பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது..!

பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் அபிஷேக் ரபி. யூடியூபர்கள் எளிதில் பிரபலமடைவதற்காக ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் யூடியூபர்களை அவதூறாக பேசி இவர்கள் பிரபலமடைவது. இதனால் இவர்களது ஆதரவாளர்களும் மோதிக் கொள்கிறார்கள். அந்த வகையில் பிரபல யூடியூபரான இர்ஃபானை தனது வீடியோவில் பிரியாணி மேன் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு இர்பானின் கார் விபத்தில் சிக்கியதில் மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். அப்போது அந்த காரை இர்பான் ஓட்டவில்லை என்றும் அவருடைய உறவினர்தான் ஓட்டினார் என்றும் சொல்லப்பட்டது. அது போல் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருந்த போது இர்பான் துபாயில் தனது குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதை யூடியூபில் வெளியிட்டிருந்தார். இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இர்பானின் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிறகு சுகாதாரத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இந்த விஷயத்தையும் கார் விபத்து விஷயத்தையும் கையில் எடுத்த பிரியாணி மேன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு இர்பானும் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அது போல் டெய்லர் அக்கா என்ற யூடியூப் சேனலில் டெய்லரிங் குறித்த பதிவுகளை பெண் ஒருவர் வெளியிட்டு வருகிறார். இவர் பிளவுஸ் தைத்து கொடுப்பதை பிரியாணி மேன் ஆபாசமாக வீடியோ வெளியிட்டிருந்தார். அது போல் எப்போதும் பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பது, செம்மொழி பூங்கா குறித்து ஆபாசம் கொப்பளிக்க பேசியிருந்தார்.
இதனால் பிரியாணி மேனை பலர் விமர்சித்திருந்தார்கள். இதையடுத்து அவர் யூடியூப்பில் நேரலையில் தற்கொலை செய்து கொள்வது போல் ஒரு வீடியோவை போட்டு தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன்தான் என சொல்லிக் கொண்டே தற்கொலைக்கு முயன்றார். அப்போது நெட்டிசன்கள் அவரது தாயை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியதும், அவர் போய் காப்பாற்றியுள்ளார்.
சுமார் 3 மணி நேரமாக லைவில் அவர் இது போல் செய்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பிரியாணி மேன் அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அநாகரீகமாக பெண்களை விமர்சித்தல், பாலியல் துன்புறுத்தல் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவிற்கு வரும் பெண்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் பிரியாணி மேன் என அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் ரபி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்தவ மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.