#BIG NEWS : காஷ்மீரில் பயின்று வரும் தமிழ்நாடு மாணவர்களின் நிலை என்ன? ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

நேற்று இரவில் இருந்து இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் உள்ள சில முக்கியமான இடங்களை இந்தியா ட்ரோன்கள் மூலம் தாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயின்று வரும் தமிழ்நாடு மாணவர்களின் நிலை குறித்தும், அவர்களை பத்திரமாக அழைத்துவர தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் தமிழ்நாடு அரசு செய்திகுறிப்பு ஒன்றை இன்று (மே 9) வெளியிட்டுள்ளது.
அந்த செய்திகுறிப்பில், "கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டு, அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டது. 011-24193300 (லேண்ட்லைன்), 9289516712 (வாட்ஸ்அப் மொபைல் நம்பர்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அமைக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போது, தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் படித்துவரும் தமிழ்நாட்டைச் சார்ந்த 52 மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்துவர வேண்டும் என்று முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த வேண்டுகோளுக்கு இனங்க, தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் ஐஏஎஸ் ஆகியோர் அம்மாநில நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து பேசி, தமிழ்நாட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது விமான சேவைகள் முற்றிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ள காரணத்தினாலும், அவர்களை சாலை வழியாக பாதுகாப்பாக அழைத்துவருவதற்கான சூழ்நிலை இல்லாத காரணத்தினாலும், தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழ்நாட்டு மாணவர்களை மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.