#BIG NEWS : திமுக அமைச்சர்களின் தீர்ப்பை படித்து விட்டு என்னால் 3 நாட்கள் தூங்க முடியவில்லை : உயர்நீதிமன்ற நீதிபதி..!

திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், 2 அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 2 அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், தற்போது மற்ற 2 அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்யவுள்ளது. அமைச்சர் பொன்முடி வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிமன்ற தீர்ப்பை சரமாரியாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் மீதான வழக்குகளில் பின்பற்ற நடைமுறை தவறானது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிக்கிறது. ஒரே தீர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு தேதியை மாற்றி வழக்குகளில் இருந்து சம்பந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகவே செய்கின்றனர். தீர்ப்பை படித்து விட்டு என்னால் 3 நாட்களாக தூங்க முடியவில்லை. நீதிமன்றம் என்பது கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல, சுப்பனுக்கும் குப்பனுக்கும் உரித்தானது. இவ்வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணை செய்யப்படுகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், லஞ்ச ஒழிப்பித்துறை ஆகியோர் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.