#BIG NEWS : நாட்டையே உலுக்கிய ஆலுவா கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..!

கேரள ஆலுவா மாவட்டத்தில் வசித்து வந்த பீகார் மாநில தம்பதியின் 5 வயது மகள் கடந்த ஜூலை 28ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இந்த சம்பவம் தொடர்பாக அதேபகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அஸ்பக் ஆலமிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அஸ்பக் ஆலம் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், சிறுமியின் உடலை ஆலுவா மார்க்கெட்டிற்கு பின் உள்ள குப்பைக்கிடங்கில் வீசியுள்ளார். இதனை தொடர்ந்து 20 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் அஸ்பக் ஆலம் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளி அஸ்பக் ஆலமிற்கு கோர்ட்டு தூக்குதண்டனை விதித்தது. குற்றவாளி அஸ்பக் ஆலமிற்கு 5 ஆயுள் தண்டனைகளையும் கோர்ட்டு விதித்தது. குற்றவாளி 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் விசாரணை தொடங்கி 110 நாட்களில் எர்ணாகுளம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.