#BIG NEWS : 230 நாட்கள் கடந்தும் ஜாமீன் கிடைக்கவில்லை... செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/e4974d4b100d0ad91533fec3c97173c7.webp?width=836&height=470&resizemode=4)
கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் வழக்கின் அடுத்தகட்டமாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தும்படி சிறைத்துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கடந்த ஜனவரி 11ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஜனவரி 22ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன்மூலம் 16வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்மூலம் 17வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 230 நாட்களை கடந்தும் ஜாமீன் கிடைக்காமல் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.