இந்தியா வந்தார் பூடான் மன்னர் ஜிக்மே கேசர்..!

கடந்த ஏப்ரல் மாதம் அரசு முறை பயணமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் இந்தியா வருகை தந்தார். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஜிக்மே கேசர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் 8 நாள் பயணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியா வந்தார். அவரை தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மூத்த அதிகாரிகள் நேரில் வரவேற்றனர். இந்த பயணத்தின்போது பூடான் மன்னர் ஜிக்மே கேசர், பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா-பூடான் இடையேயான நெருங்கிய உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.