ஆன்மீகம் அறிவோம் : எலுமிச்சம் பழம் தானாக சுற்றும் அதிசய பைரவர் கோவில்..!

தமிழகத்தில் எத்தனையோ சக்தி வாய்ந்த, அதிசயங்கள் பல நடக்கும் கோவில்கள் உள்ளன. அதில் தான் ஸ்ரீ அஷ்டபுஜ காலகண்ட பைரவர் திருக்கோவில்.
சித்தர்கள் வழிபடும் கோவிலாக ஸ்ரீ அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில் விளங்குகிறது. வேலூர் மாவட்டத்தில் இரங்காபுரம் மலைமேல் உள்ளது இந்த திருக்கோயில். கோபுரங்கள் இல்லாத சுற்றி பாதி சுவர் மட்டுமே உள்ள கால பைரவர் சன்னதி இது. இங்கு தனித்து நின்று காட்சி அளிக்கும் கால பைரவர் சித்தர்கள் வணங்கும் தெய்வமாக விளங்குகிறார்.
வருடம் ஒரு முறை மட்டுமே இவருக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, அருள் வாக்கு வாங்குவார்கள். மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக மட்டுமல்ல, இப்பகுதியில் மிகவும் பிரபலமான கோவிலாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட அந்த நாளில் நடக்கும் அதிசயத்தை காண ஏராளமான பக்தர்கள் இந்த மலைக்கோவிலுக்கு வருவதுண்டு. மே மாதம் நடைபெறும் விழாவின் சிறப்பம்சம் பழம் கொடுப்பது ஆகும். பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்ததும் அவரின் தலையில் பூ வைத்து அதில் ஒரு எலுமிச்சம் பழம் வைப்பார்கள்.
எலுமிச்சை பழத்தை வைத்ததும் சிறிது நேரத்தில் ஒரு "ஈ" அங்கு பறந்து வந்து அந்த எலுமிச்சம் பழத்தில் அமரும். சில விநாடிகள் அமர்ந்துவிட்டு பிறகு பறந்து சென்றுவிடும். அது பறந்து சென்றதும் அந்த பழம் தானாக சுற்றி பிறகு கீழே விழும் அதை ஒருவர் கீழே அமர்ந்து பிடித்துக் கொள்வார். வருடந்தோறும் இந்த அதிசய நிகழ்வு இக்கோவிலில் நடந்து வருகிறது.
பைரவர் தலையில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் தானாக சுற்றும் அதிசய நிகழ்வு நடந்த பிறகு பலருக்கும் இங்கு பைரவரிடம் உத்தரவு பெற்று அருள்வாக்கு கேட்டு சொல்கிறார்கள். பைரவர் உத்தரவுடன் சொல்லப்படும் இந்த அருள்வாக்கால் பல பக்தர்களின் பிரச்சனைகள், மனக்குறைகள் நீங்கி வருவதாக சொல்லப்படுகிறது. வேலூரிலிருந்து இக்கோவிலுக்கு செல்வதற்கு பஸ் வசதி உள்ளது. செங்கானத்தத்திற்கு நேரடியாகவும் பேருந்து வசதி உள்ளது. இரங்காபுரத்திலிருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.