உஷார்!! ஃபாஸ்டேக் இல்லாததால் நீ...ண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்! சுங்கசாவடிகளில் தவிப்பு!
சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசலை மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஃபாஸ்டேக் திட்டத்தை, வாகன ஓட்டிகளிடையே போதிய விழிப்புணர்வும், ஆதரவும் இல்லாததால் தற்போது ஜனவரி மாதம் 14ம் தேதி வரையில் நீட்டித்து இருந்தது. ஆனாலும் நிறைய வாகன ஓட்டிகள் இன்னும் ஃபாஸ்டேக் பெறாததால், தமிழகத்தில் சுங்கசாவடிகளில் இவ்வாறு ஃபாஸ்டேக் பெறாத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பொதுவாக சுங்கசாவடிகளில் கடப்பதற்கு நிறைய லேன்கள் இருக்கும். வாகன நெரிசல்களைத் தவிர்ப்பதற்கும், கால விரயத்தை தவிர்ப்பதற்கும் ஃபாஸ்டேக் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது வாகன ஓட்டிகள் இன்னும் ஃபாஸ்டேக் பெறுவதற்கு ஆர்வம் காட்டாத நிலையில், சுங்கசாவடிகளில் ஃபாஸ்டேக் பெற்று கடக்க வரும் வாகனங்கள் அதிக சிரமங்கள் இல்லாமல், வரிசையில் நிற்காமல் எளிதாக கடந்துச் சென்று விடுகின்றன.
சுங்கசாவடிகளில் ஃபாஸ்டேக் பெறாத வாகனங்களுக்கு தற்போது அபராதம் ஏதும் விதிக்கப்படாமல், பணமாக கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு அனுமதித்தாலும், ஒரு பாதை வழியாக மட்டுமே தற்சமயம் இவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் ஃபாஸ்டேக் பெறாத வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக, சில சுங்கசாவடிகளில் மணி கணக்கிலும் வரிசையில் நின்று செல்கின்றன.
ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு பல வரிசைகள் ஒதுக்கப்பட்டதால், அவை விரைவாக சுங்கசாவடியை எளிதில் கடந்துச் சென்றன. அதே சமயம் ஃபாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கு ஒரேயொரு வரிசை ஒதுக்கியிருந்ததால் பல சுங்கசாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஃபாஸ்டேக் பெறாத வாகனங்களை சுங்கசாவடி ஊழியர்கள் தனியே பிரித்து இந்த வரிசையில் அனுமதித்துக் கொண்டே இருந்தனர். நேரம் செல்ல செல்ல ஃபாஸ்டேக் வாங்காத வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால், பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.
தமிழகத்தில் தினசரி ஆறு லட்சம் வாகனங்கள் டோல்களை கடக்கின்றன. இவற்றில் 2 லட்சம் வாகனங்கள் மட்டுமே ஃபாஸ்டேக் பெற்றுள்ளன. இன்னும் நான்கு லட்சம் வாகனங்கள் இந்த திட்டத்தில் இணையவே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டோல்களில் வழக்கமாக சிங்கில், டபுள், ரிட்டர்ன் என்று பல விதங்களில் டோல் வசூலிக்கப்படும். ஃபாஸ்டேக் ஒட்டிய வாகனங்களில் இரண்டு முறை டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற புகார்களை தெரிவிக்க 1033 என்ற டோல்ஃப்ரீ எண்ணை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்தது. அதில், 12 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் இதுவரையில் பதிவாகி உள்ளதாக சொல்கிறார்கள்.
newstm.in
newstm.in