மக்களே உஷார்..! இனி வேகக்கட்டுப்பாட்டை மீறினால் உடனுக்குடன் அபராதம்!

விபத்துகளைக் குறைக்கும் வகையில் சென்னையில் வாகனங்களுக்கு அதிகபட்ச வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தன. சென்னை பெருநகரில் உள்ள சாலைகளின் வகை மற்றும் பல்வேறு வாகன வகைகள் மற்றும் இடங்களுக்கான வேக வரம்புகள் குறித்து ஆராய்ந்த குழு பரிந்துரையின்படி வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
இலகுரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 60 கி.மீ ஆகவும், கனரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், ஆட்டோக்களின் அதிகபட்ச வேக வரம்பு 40 கி.மீ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதுவே குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வகை வாகனங்களுக்குமான அதிகபட்ச வேக வரம்பு 30 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வேக கட்டுப்பாடு அமலுக்கு வந்த நிலையில் இதை மீறியவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அபராதம் வசூலித்தனர். ரேடார் கண் மூலமாக வேகம் கண்டறியப்பட்டு வேகத்தை மீறிய நான்கு கார்கள், 111 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 12,100 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.