தத்தளிக்கும் பெங்களூரு...12 மணிநேரத்தில் 130 மி.மீ. மழை..!
பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவில் பெய்ய தொடங்கிய மழை, படிப்படியாக வலுத்தது. திங்கட்கிழமை காலை 6 மணி வரை கொட்டி மழையால், அடுக்குமாடி குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கியது.
ஜெயநகர், ஜக்கசந்திரா, கோரமங்கலா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாய் மாறின. மழைநீர், வெள்ளம், மின்விநியோகம் பாதிப்பு என மக்கள் கடும் அவதி அடைந்தனர். மிக்கோ லே அவுட் பகுதியில் மின்சாரம் தாக்கி 63 வயது முதியவர், 12 வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்தனர். வொயிட்பீல்டு பகுதியில் 35 வயது பெண்மணி சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார்.
மழைக்கு 3 பேர் பலியான நிலையில், ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் தத்தளித்தவர்கள் சிறிய வகை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.இந்நிலையில், பெங்களூரு நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் வெளியிட்டு இருக்கிறது. பாகல்கோட், பெலகாம், சிக்கல்லபுரா, தார்வாட், கடக், கொப்பல், கோலார், விஜயநகரா பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மைய இயக்குநர் என். புவியரசு கூறியதாவது:
80 மி.மீ, முதல் 100 மி.மீ, வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கிராமப்புறங்களில் இதுபோன்ற மழையளவு ஒன்றும் இல்லை. ஆனால் பெங்களுரு போன்ற நகர்ப்புறங்களில் நீர்வடிகால் வசதிகள் அடைப்பட்டுள்ளன. எனவே, அதற்கேற்ப தயாராக இருக்க வேண்டும் என்று ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
.png)