1. Home
  2. தமிழ்நாடு

வாழைப்பழம் சாப்பிட்டபோது குறுக்கே சென்றதால் விவசாயியை கடித்து குதறிய கரடி..!

1

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா, காரியாண்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (47). விவசாயியான இவருக்கு, காரியாண்டிகுளம் நடுப்பத்து பகுதியில் வாழைத் தோட்டம் ஒன்று உள்ளது. தற்போது வாழைகள் நன்கு வளர்ந்து தார்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், நேற்று வழக்கம் போல தனது வாழைத் தோட்டத்திற்குச் சென்ற பாலகிருஷ்ணன், அங்கு வாழைப்பழங்களை ஒரு கரடி சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார்.

அவர் சுதாரித்து அங்கிருந்து தப்பிப்பதற்குள்ளாக பாலகிருஷ்ணனை பார்த்த கரடி, நொடிப்பொழுதில் அவர் மீது பாய்ந்து கொடூரமாக தாக்கியது. கரடி பிடியில் இருந்து தப்ப முடியாத அவர், கத்தி கூச்சலிட்டுள்ளார். இதில் கரடி அவரது இடுப்புப் பகுதியை கடித்துக் குதறியது. இருப்பினும், ஒருவழியாக கரடியின் பிடியில் இருந்து தப்பியோடி வந்த பாலகிருஷ்ணன், ஊருக்குள் வந்து அங்கிருந்தவர்களிடம் நடந்ததை கூறினார்.

ஊர்க்காரர்கள் வருவதற்குள்ளாக, அந்த கரடி மீண்டும் தோட்டத்தில் உள்ள புதர் செடிகளுக்குள் மறைந்தது. கரடி தாக்கியதலில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன், முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திசையன்விளை அருகே புலிமான்குளத்தில் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் கரடி நடமாடிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. தற்போது விவசாயி ஒருவரை கரடி தாக்கியதால், பொதுமக்கள் வெளியில் நடமாட கூட பயப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like