1. Home
  2. தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் நாளை பந்த்..! விசிக, இ.கம்யூ ஆதரவு..!

1

 தமிழக விவசாய விவசாய சங்கங்கள் டெல்டா மாவட்டங்களில் பந்த் போராட்டம் அறிவித்துளளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், ''காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று முழு கடை அடைப்புப் போராட்டத்தை நடத்துவது என்று விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்தப் போராட்டத்திற்கும் அன்றைய தினம் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக நடத்தப்படும் மறியல் போராட்டத்துக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

குறுவைப் பயிரைப் பாதுகாக்கவும், சம்பா சாகுபடியை உடனடியாகத் துவக்கவும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்குக் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய பாஜக அரசின் நீர்வளத்துறை அமைச்சரைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக சந்தித்து வலியுறுத்திய பிறகும் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமின்றி, கர்நாடகாவில் இருக்கும் பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று வெளிப்படையாகப் பேசி அச்சுறுத்தி வருகின்றனர். அவர்களின் தூண்டுதலின் காரணமாக கர்நாடகாவில் இருக்கும் இனவாத அமைப்புகளும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால், முதலில் தண்ணீர் திறந்துவிடுவதாகச் சொன்ன கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு இப்போது பின்வாங்கிவிட்டது. இப்படி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் பாஜகவையும், ஒன்றிய பாஜக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். கர்நாடக அரசு கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் இந்த 'பந்த்' போராட்டம் வெற்றிபெற அம்மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்'' என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா. முத்தரசன் இது தொடர்பாக கூறியுள்ளதாவது: நடப்பு பயிராண்டில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை விளைந்து, கதிர் முற்றும் நிலையில் தண்ணீர் இல்லாமல் கருகி மடிந்து வருகிறது. விளைந்து நிற்கும் குறுவையின் உயிர் காப்பாற்ற, காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் கேட்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முறையிடப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கும் மேலே உள்ள நீர் தேக்கங்களில் போதுமான தண்ணீர் இருந்தும், தமிழ்நாட்டின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் திரும்ப, திரும்ப முறையிட்டு, சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஒன்றிய அரசின் பாராமுகப் போக்கையும், கர்நாடக மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி வரும் அமைப்புகளின் பொறுப்பற்ற செயல்களையும் கண்டித்து, தமிழ்நாட்டின் உணர்வை பிரதிபலிக்கும் முறையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் நாளை  (11.10.2023) காவிரி டெல்டா மாவட்டங்களில் நடத்தும் முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பான மறியல் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like