3 கி.மீ தூரத்தில் தரையிறக்க வேண்டிய பலூன்... 30 கி. மீ தூரத்தில் தரை இறங்கியதால் பரபரப்பு..!

தமிழ்நாடு சுற்றுலா துறை, சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் தனியார் அமைப்புடன் இணைந்து பலூன் திருவிழாவைச் சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பலூன் திருவிழாவை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் 10-வது ஆண்டாக ஜனவரி 14ம் தேதி பலூன் திருவிழா தொடங்கியது.
3 நாட்களாக நடந்து வரும் இந்தப் பலூன் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தப் பலூன் திருவிழாவில் பிரான்ஸ், பிரேசில், வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டிருக்கின்றன.
இந்த விழாவில் பறக்கவிடப்பட்டுள்ள யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவங்களில் பலூன்களைச் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகிறார்.
பலூனில் குறிப்பிட்ட தூரம் மக்கள் பறந்தபடி பொள்ளாச்சியின் அழகை ரசிக்க முடியும். இதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மைதானத்திலிருந்து 6-ம் எண் கொண்ட யானை வடிவிலான ராட்சத பலூன் வானில் பறந்தது. இந்தப் பலூனில் வெளிநாட்டை சேர்ந்த ஆண், பெண் பைலட்டுகள் இருந்தார்கள். அவர்களுடன் 2 பெண் குழந்தைகளும் பலூனில் பயணம் செய்தார்கள்.
ஆச்சிப்பட்டி மைதானத்திலிருந்து 3 கி.மீத்தூரத்தில் இந்தப் பலூனைத் தரையிறக்க திட்டமிட்டிருந்தார்கள் ஆனால், காற்றின் வேகத்தால் பலூன் திசைமாறி வானில் சுற்றிக்கொண்டே இருந்தது.
பின்னர் திசை மாறிய பலூன் 30 கி.மீத்தூரம் தாண்டி உள்ள கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டு என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் தரையிறங்கியது.
அதிர்ஷ்டவசமாகப் பலூனில் இருந்தவர்கள் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்கள். வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குக் கூடினார்கள்.
இதற்கிடையே வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் விழா ஏற்பாட்டாளர்கள் விரைந்து சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன், வயல் வெளியில் விழுந்த ராட்சத பலூனில் இருந்த ஆண், பெண் பைலட்டுகள், 2 பெண் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவிலிருந்து பறக்க விடப்பட்ட ராட்சத பலூன் மீண்டும் கேரள மாநிலம் பாலக்காட்டு வயல்வெளிக்குள் தரை இறங்கியுள்ளது.
3 நபர்களுடன் சென்ற பலூன், கேரளா மாநிலம் பாலக்காடு பத்தான்சேரி பகுதியில், இன்று காலை 7.30 – 7.45 பலூன் வயல்வெளிக்குள் இறங்கியது. பலூனில் பயணித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகத் தரையிறக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.