பகீர் தகவல்..! திருமணமான ஒரே ஆண்டில் வங்கி ஊழியர் தற்கொலை..!

திருவண்ணாமலை பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் தலைமை காசாளராக பணியாற்றி வருகிறார் மயிலாடுதுறை அடுத்த எடக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி (29).இவருக்கும் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசனுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் ஆனதில் இருந்தே சீனிவாசன் வீட்டார் ஆனந்தியை தாய் வீட்டுக்கு போக கூடாது எனவும் கூடுதல் நகை வரதட்சணையாக வேண்டும் எனவும் யாரிடமும் பேசக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உழைச்சல் அடைந்த ஆனந்தி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு பணிமாறுதல் பெற்று திருவண்ணாமலை பே கோபுர வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் திருமணத்தின் போது ஐடி கம்பெனியில் வேலை செய்வதாகவும் பொய் சொல்லி திருமணம் செய்து கொண்ட ஆனந்தியின் கணவர் சீனிவாசன் திருமணத்திற்கு பின்னர் எந்த வேலைக்கும் செல்லாமலே இருந்துள்ளார். குறிப்பாக மாதம்தோறும் ஆனந்தி வாங்கும் சம்பளத்தை சீனிவாசன் வங்கி கணக்கிருக்கும் மற்றும் தனது மாமியாரின் வங்கி கணக்கும் அனுப்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக தனது தாய் வீட்டிற்கு சென்ற ஆனந்தி தனது கணவர் தனியாக வெளியில் செல்வதற்கு புதிய கார் ஒன்று வேண்டும் என்றும் கூடுதலாக 10 சவரன் தங்க நகை வேண்டும் எனவும் கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஆனந்தியின், தந்தை மற்றும் தாயார் ஏற்கனவே 22 சவரன் நகை போட்டுள்ளதாகவும் 4 லட்சம் ரூபாய் திருமணத்திற்கு கொடுத்துள்ளதாகவும் அவ்வளவு தான் முடியும் என ஏற்கனவே சீனிவாசன் தாய் மற்றும் தந்தையிடம் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வரதட்சணை கேட்டு அடிக்கடி ஆனந்தியிடம் சீனிவாசன் தகராறு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன் மனைவிக்குள் நடைபெறும் சண்டை அவர் பணி செய்யும் வங்கி வரை சென்று அங்கு உள்ளவர்கள் சமாதானம் செய்யும் நிலைக்கு சென்றுள்ளது. இந்த சூழலில் கடந்த 15 ஆம் தேதி வங்கிப் பணியை முடித்து வீட்டிற்கு சென்ற ஆனந்திக்கும் சீனிவாசனுக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து சீனிவாசன் அவரது மாமனாரின் செல்போன் எண்ணிற்கு ஆனந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மெசேஜ் இல் அனுப்பி உள்ளார். அதனை கவனிக்காத நிலையில் சீனிவாசனின் தாய் பொன்னியை தொடர்பு கொண்டு உங்களது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டும் குணம் கொண்ட சீனிவாசனும் அவரது குடும்பம் என்பதால் ஆனந்தியின் தாய் மற்றும் தந்தையர் இதனை நம்பவில்லை.இதனை தொடர்ந்து 16ஆம் தேதி பேங்க் ஆப் பரோடா வங்கியின் மேலாளர் ஆனந்தியின் தம்பிக்கு தொடர்பு கொண்டு நேற்று தற்கொலை செய்து கொண்டு வீட்டில் இறந்து விட்டதாக தகவல் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி மாலை திருவண்ணாமலைக்கு வந்த ஆனந்தியின் தாய் தந்தையர் மற்றும் உறவினர்கள் வந்த பொழுது சீனிவாசன் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக ஆனந்தியின் தந்தை நடராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஆனந்தியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வரதட்சணை கேட்டு தனது பெண்ணை கொலை செய்து தூக்கிலிட்டதாக கூறி இதற்கு காரணமான சீனிவாசன் மற்றும் அவரது தாய் பொன்னி மற்றும் உறவினர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.