நாளை மறுநாள் வளைகாப்பு..! சந்தோஷமாக ஊருக்கு சென்ற கர்ப்பிணி விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/b2c1961b19f5e9a46c2421dc61a3d61c.webp?width=836&height=470&resizemode=4)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி கஸ்தூரி வளைகாப்பிற்காக சொந்த ஊருக்கு ரயிலில் பயணித்த நிலையில், வாந்தி எடுப்பதற்காக கதவு அருகே நின்றிருந்த போது தவறி விழுந்து பலியானார்.
தென்காசி அருகே மேல் நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்ததால், அவருக்கு வளைகாப்பு செய்ய குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து கர்ப்பிணி கஸ்தூரி தனது குடும்பத்தினருடன் நேற்றிரவு புறப்பட்ட கொல்லம் விரைவு ரயிலில் தென்காசிக்கு பயணம் செய்துள்ளார். ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ரயிலின் கதவருகே சென்று வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென மயக்கமும் ஏற்பட்ட நிலையில், கஸ்தூரி நிலைதடுமாறி ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால், அவரது பெற்றோரிடம், விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் அகமது விசாரணை நடத்தி வருகிறார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கஸ்தூரியின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரித்து வருகிறார்.
சொந்த ஊரில் நடைபெற உள்ள கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளவும், நாளை மறுதினம் வளைகாப்பு நிகழ்ச்சிக்காகவும் சென்னையில் இருந்து சந்தோஷமாக கிளம்பிய கர்ப்பிணி பெண், திருமணமான 9 மாதங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.