அய்யப்ப பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்லாம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு..!
சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள் தங்களது இருமுடியை விமானத்தினுள் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் அய்யப்ப பக்தர்கள் தங்களது இருமுடியை விமானத்தினுள் தங்களுடன் எடுத்துச் செல்வதற்கு, நேற்று (நவ. 28) முதல் 2026 ஜனவரி 20 ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதுபற்றி, அவர் கூறியதாவது:-
இருமுடியின் மீது பக்தர்கள் கொண்டுள்ள ஆழமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் இருமுடியை விமானத்தில் அவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும்” எனக் கூறியுள்ளார். இதன்மூலம், அய்யப்ப பக்தர்கள் தங்களது இருமுடியை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தேவையில்லை எனவும், பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு தங்களுடனே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.