அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி காலமானார்..!
உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி நடந்தது. ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் தலைமை பூசாரியாக ஆச்சாரியா லட்சுமிகாந்த் தீட்சித் செயல்பட்டார். அவர் உடல்நல குறைவால் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 86.
கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலமானார்.அவருடைய மறைவுக்கு உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
காசியின் சிறந்த ஒரு பண்டிதர் மற்றும் ஸ்ரீராம ஜென்மபூமியில் கும்பாபிஷேக விழாவின்போது, தலைமை பூசாரியாகவும் செயல்பட்ட ஆச்சாரியா லட்சுமிகாந்த் தீட்சித்தின் மறைவு, ஆன்மீக மற்றும் இலக்கிய உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும்.
சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாசாரம் ஆகியவற்றிற்கு அவர் ஆற்றிய சேவைக்காக என்றும் நினைவுகூரப்படுவார் என தெரிவித்து உள்ளார். அவருடைய ஆன்மா கடவுள் ராமரின் பாதத்தில் இளைப்பாற ஓரிடம் தரும்படி ராமரிடம் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவருடைய சீடர்கள் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுக்கு இந்த வருத்தத்தினை தாங்கி கொள்ள வலிமை தரும்படியும் வேண்டி கொள்கிறேன் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.