அயலான் திரைவிமர்சனம் - "குடும்பத்துடன் பார்க்கலாம்"
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/4b0c8e6f2457b29475706a0f3c57d862.webp?width=836&height=470&resizemode=4)
‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’.
சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், குடும்பம் குடும்பாக சென்று அயலான் திரைப்படத்தை அனைவரும் கண்டு ரசிக்கின்றனர். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளதாகவும், படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் நேர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
பேராசை பிடித்த பணக்காரர்கள் மேலும், மேலும் சொத்து சேர்க்க இந்த பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர் என்றும் அதிலும், ஒருவர் ஒட்டுமொத்தமாக அழிக்கத் திட்டமிட்டு இருப்பதை வேற்று கிரகத்தில் இருந்து கவனிக்கும் ஒரு ஏலியன் பூமிக்கு வந்து அந்த வில்லனிடம் இருக்கும் பொருளை எடுக்க முயற்சி செய்கிறது. ஆனால், அந்த ஏலியனை அடைத்து வைத்து வில்லன் ஆராய்ச்சி என்கிற பெயரில் சித்ரவதை செய்ய அந்த ஏலியனுக்கு நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன் எப்படி உதவி செய்கிறார் என்பது தான் இந்த அயலான் படத்தின் கதை.
முதல் பாதியில் டாட்டூ என்கிற ஏலியன் அதாவது வேற்று கிரக வாசியை க்யூட்டாக காட்டி குழந்தைகளை கவர்ந்துவிட்டார்கள். மேலும் பெரியவர்களுக்கும் பிடித்திருக்கிறது. விஷுவல் எஃபெக்ட்ஸ் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக இருக்கிறது.
ஆனால் படத்தில் சில மைனஸ் பாயிண்ட்டுகளும் உள்ளது. காட்சி மாற்றத்தில் தொய்வு இருக்கிறது. வடக்கில் இருந்து அழைத்து வரப்பட்ட வில்லனான சரத் கேல்கர் பயங்கரமான வில்லனாக தெரியவில்லை.நெடுஞ்சாலையில் நடக்கும் சேஸிங், கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக காட்டியிருக்கலாம்.
அயலான்- குடும்பத்துடன் பார்க்கலாம்