மக்களே கவனம்..! இந்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும்..!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் (26-03-2025) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 27 முதல் 30ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் இன்றும் நாளையும் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வரும் 27 முதல் 29ம் தேதி வரை படிப்படியாக 2 - 3° செல்சியஸ் உயரக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.