ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற நபர் கைது !

தேனி மாவட்டம் போடி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் போடி - தேவாரம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி நடந்தது. இதில் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் ரூபாய் தப்பியது. இது குறித்து போடி பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கார்த்திகேயன் (32) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேரமாவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்றது போடி முந்தல் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார் (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.