இந்த தீர்ப்பானது வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரானது - அசாதுதின் ஓவைசி கண்டனம்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/1f8345b79136af16a6e71b8c5ce1d0ab.jpeg?width=836&height=470&resizemode=4)
உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாகவும் அங்கு வழிபாட நடத்த அனுமதி கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் படி இந்திய தொல்லியல் துறை மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தது. இந்த ஆய்வில் மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் மிகப்பெரிய இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், கோவிலின் தூண்கள், சுவர்கள் மறுசீரமைக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டு உள்ளது என அறிக்கை தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று வாரணாசி நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடித் தீர்ப்பு அளித்தது. அதில் மசூதியின் அடித்தளத்தில் தெற்கு பகுதி அறையில் வழிபாடு நடத்த அனுமதி அளித்தது. மேலும், ஒரு வார காலத்துக்குள் வழிபாடு நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை 3 மணிக்கு பூஜை நடத்தப்பட்டு ஆரத்தி காட்டப்பட்டது. இன்று நடந்த பூஜையில் கலந்து கொண்ட பக்தர் ஒருவர் நந்தியை பார்த்தாக தெரிவித்துள்ளார். பூஜை நடத்தப்பட்டதை அடுத்து ஞானவாபி மசூதி வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஞான வாபி மசூதியில் 4 நிலவறைகள் உள்ளன. இதில் தெற்குப் பகுதியில் இருக்கும் ‘வியாஸ் ஜி கா தெஹ்கானா’-வில் பூஜை நடத்த நீதிமன்றம் அனுமதித்தது. இந்த அறை வியாஸ் குடும்பத்தினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பாரம்பரியமாக இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக இருந்து பூஜைகள் நடத்தி வந்துள்ளனர்.
மசூதி தரப்பில் கூறுகையில், வியாஸ் குடும்பத்தினர் இதுவரை அந்த நிலவறையில் பூஜை செய்ததில்லை என்றும், அங்கு எந்த சிலையும் இல்லை என்று கூறியது.
ஞானவாபி மசூதி கமிட்டி வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்கள் பூஜை நடத்த தடைகோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்புக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். தீர்ப்பு குறித்து அவர் கூறியதாவது –
வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளில் இந்த தீர்ப்பளித்துள்ளார். 1993ம் ஆண்டிலிருந்து அங்கு எந்த வழிபாடும் நடத்தப்படவில்லை என அவரே கூறியுள்ளார். 30 வருடங்கள் கடந்து விட்டன. அங்கு சிலை இருப்பது எப்படி அவருக்குத் தெரியும்? இந்த தீர்ப்பு வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு எதிரானது. வழிபாடு நடத்துவதற்காக கிரில்களை 7 நாட்களுக்குள் அகற்ற உத்தரவிட்டுள்ளார். மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இது தவறான முடிவு. மோடி அரசு, வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் படி செயல்படுகிறோம் என்பதை உறுதி செயாத வரை, இது போன்ற நிகழ்வுகள் தொடரும்.