அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் முரணானது.. ஏற்க முடியாது.. AICTE உத்தரவால் அதிர்ச்சி !

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரியின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு தவிர பிற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அரியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழக அரசின் தேர்ச்சி உத்தரவை ரத்து செய்ய கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்தபோது, பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என சில மாணவர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ஏற்கனவே தனியார் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களில் பெருமளவு பொறியியல் படித்தவர்களே பணியாற்றுவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
அதோடு அரியர் மாணவர்கள் தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி பெற முடியும் என எதிர்பார்க்கலாம் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
newstm.in