இப்படி ஒரு பொய்யை பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா..? முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்த அண்ணாமலை..!

முதல்வர் ஸ்டாலினை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து, எண் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் (தமிழ்) கடைசி இடத்தில் உள்ளது. கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழகக் குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.
இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே PMSHRI உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை நீங்கள் நிறைவேற்றினீர்களா இல்லையா ஸ்டாலின் அவர்களே?
செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? சமக்ர சிக்ஷாவின் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின் படி, 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25ம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப்படவில்லை.
அப்படி இருக்கையில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.