1. Home
  2. தமிழ்நாடு

நீங்க தான் முதல் பட்டதாரியா? அப்போ அரசு தரும் உதவித்தொகைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்..!

1

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணம் வழங்கப்படுகிறது. அரசு கல்லூரிகள் என்று இல்லாமல், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களும் இந்த கல்வி கட்டண சலுகையை பெற்றுகொள்ளலாம்.

இந்த சலுகையை பெற நீங்கள் உங்கள் வீட்டின் முதல் பட்டதாரியாக இருக்க வேண்டும். அதாவது, உங்கள் பெற்றோர், சகோதரர்கள் யாரும் இதுவரை கல்லூரிக்கு சென்று பட்டப்படிப்பை பெற்றிருக்கக்கூடாது. அப்படி என்றால், நீங்கள் இந்த கல்வி உதவித்தொகைக்கு தகுதியானவர்கள் ஆவீர்கள்.

அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் சாதிப் பாகுபாடு, வருமான பாகுப்பாடின்றி கல்வி கட்டண செலவை அரசு வழங்கும்.

தகுதிகள் என்ன?

  • உங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக நீங்கள் இருக்க வேண்டும்.
  • கலந்தாய்வின் மூலம் கல்லூரியில் இடம் பெற வேண்டும்.
  • உங்கள் அண்ணன்/ அண்ணா பட்டப்படிப்பு முடித்தும் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறவில்லை என்றால் நீங்கள் பெறலாம்.

தமிழ்நாடு அரசு பணியிலும் முன்னுரிமை
மேலும், தமிழ்நாடு அரசு பணிகளில் முதல் பட்டதாரி சான்றிதழ் பெற்ற பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமில்லாமல், கல்வி சார்ந்த பல்வேறு உதவித்தொகைக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் உதவியாக இருக்கும்.

எவ்வளவு கட்டண சலுகை அளிக்கப்படும்?

  • பொறியியல் படிப்புகளில் சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்திற்கு ஏற்ப கல்வி கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.
  • அரசு பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.2000 கட்டண சலுகை அளிக்கப்படும்.
  • அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் Govt. Aided படிப்புகளுக்கு ரூ.4,000 அளிக்கப்படும்.
  • அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் Self-Financing படிப்புகளுக்கு ரூ.25,000 அளிக்கப்படும்.
  • தனியார் பொறியியல் கல்லூரிகளில் ரூ.25,000 முதல் ரூ.27,500 வரை அளிக்கப்படும்.
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு Non Self-Financing படிப்புகளுக்கு ரூ.12,000 மற்றும் Self-Financing படிப்புகளுக்கு ரூ.20,000 அளிக்கப்படும்.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?
முதல் தலைமுறை பட்டதாரி கல்வி உதவித்தொகை பெற அதற்கான சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். 12-ம் வகுப்பை முடித்தவர்கள் இந்த சான்றிதழ் பெற தகுதியானவர்கள். மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் படி , குடும்பத்தில் முதல் ஆளாக பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள் அவர்கள் பகுதியில் உள்ள அரசின் இ-சேவை மையத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் வழியாகவும் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இருப்பினும், பிழைகளை தவிர்க்க மாணவர்கள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பப்பிப்பது சிறந்தது.

தேவையான ஆவணங்கள்
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெற ஒரு புகைப்படம், வீட்டு முகவரி சான்று, ஆதார் அட்டை, பள்ளி மாற்று சான்று (டிசி), 10 மற்றும் 12-வது மதிப்பெண் சான்றிதழ், வீட்டில் வேறு யாரெனும் படித்திருந்தால் அவர்களுடைய மாற்றுச் சான்றிதழ் ஆகியவை தேவை.

கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரிகள் இந்த சான்றிதழை பெற்று கலந்தாய்வின் மூலம் சேரும் கல்லூரிகளில் கல்வி கட்டண சலுகையை பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் வரை இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like