திருப்பதி போறீங்களா ? பிப். 3 முதல் 5 ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து! இலவச தரிசன டோக்கனும் இல்லை!

திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி ரத சப்தமி உற்சவம் நடைபெறுகிறது. இதை மினி பிரம்மோற்சவம் என்கிறார்கள்.
இந்த நாளையொட்டி மாட வீதிகளில் மலையப்ப சுவாமி 7 வாகனங்களில் உலா வருகிறார். பிப்ரவரி 4ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் உலா வருகிறார். இதை அடுத்து 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும் 11- 12 மணி வரை கருட வாகனத்திலும் மதியம் 1 முதல் 2 மணி வரை அனுமன் வாகனத்திலும் உற்சவர் மலையப்பர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதையடுத்து மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6- 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் நிறைவாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்த ரதசப்தமி நடைபெறுவதையொட்டி திருமலை திருப்பதி கோயிலில் சியாமள ராவ் ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறியிருப்பதாவது: வரும் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் ரத சப்தமியையொட்டி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அது போல் இலவச தரிசன டோக்கன்களும் விநியோகம் செய்யப்படாது என தெரிவித்துள்ளார்.