1. Home
  2. தமிழ்நாடு

பட்டா மாற்றம் செய்ய போறீங்களா ? வருவாய்த் துறையின் முக்கிய அறிவிப்பு..!

1

வருவாய்த் துறை வெளியிட்ட அறிக்கையில், “நில உடைமை ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு ‘தமிழ்நிலம்’ எனும் இணையம் சார்ந்த மென்பொருள் மூலமாக இணையவழி பட்டா மாறுதல் ஆணைகள் வருவாய்த்துறை அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ அல்லது இணையவழியில் https://eservices.tn.gov.in என்ற இணைய முகவரியில் பட்டா மாற்றம் கோரி விண்ணப்பம் செய்து பட்டா மாறுதல் உத்தரவுகளை பெற்று வருகின்றனர். இதில் பட்டா மாறுதல் கோரும் மனுவின் மீதான நடவடிக்கையானது குறுஞ்செய்தி (SMS) மூலம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

பட்டா மாற்றம் கோரும் மனுக்கள் இரண்டு வகைப்படும். ஒன்று உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம்; மற்றொன்று உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம். இதன்படி, உட்பிரிவுடன் கூடிய பட்டாமாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கும், உட்பிரிவு இல்லாத நேரடிப் பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கும் தனித்தனியே வரிசை எண் வழங்கப்பட்டு அவற்றின்மீது உரிய கால அளவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்றது முதல், மூன்று ஆண்டுகளில் இணையவழியில் 81.76 இலட்சம் பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இச்சேவைகளை கூடுதலான வெளிப்படைத் தன்மையுடன் விரைந்து வழங்க ஏதுவாக விண்ணப்பங்களைப் பெற்ற வரிசைப்படி தீர்வு செய்யும் நடைமுறை 4.6.2024 முதல் உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களில் ‘முதலில் வருவோருக்கு முதலில் சேவை’ என்ற நடைமுறையில் 4.6.2024 முதல் 16.6.2024 வரை 15,484 பட்டா மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்ற விண்ணப்பங்களில் ‘முதலில் வருவோருக்கு முதலில் சேவை’ என்ற நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

எனவே, இரண்டு வகையான விண்ணப்பங்களுக்கும் ஒரே வரிசை எண் வழங்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like