1. Home
  2. தமிழ்நாடு

வீடு கட்ட போறீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்..! கரண்ட் வாங்க இனி புது ரூல்ஸ்..!

1

தமிழகத்தில் புதிதாக வீடு கட்டி மின் இணைப்பு பெற அல்லது பழைய கட்டிடத்தை மாற்றி புதுப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆகும். மேலும் அவர்கள் மின் இணைப்பு வாங்க விண்ணப்பபடிவம்-1யை வாங்கி பூர்த்தி செய்து மின் வாரியத்தில் வழங்க வேண்டும். இந்த விண்ணப்பபடிவத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லை. விண்ணப்பபடிவதில் உள்ள சில அடிப்படை தகவல்களுக்கு பதில் அளித்தால் போதும். மேலும் வீட்டின் உரிமையாளர் என்பதற்கான சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

அதேநேரம் மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான உரிமையாளர் என்பதற்கான சான்றிதழைக் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அதாவது பத்திரப் பதிவுச் சான்றிதழ் போன்ற தேவையான, சட்டரீதியில் செல்லத்தக்க ஆவணங்களை மின்வாரியத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தான் தற்போது தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெற விதிமுறையாக உள்ளது.

புதிய வீடு கட்டுவோர் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவோர் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்று சான்றிதழ் அவசியம் என்று இதுவரை இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பொது கட்டட விதிகள் தொடர்பாக 2019ல் புதிய சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, 10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அனுமதி பெறுவோர், விதிமுறைகளுக்கு உட்பட்டு, கட்டடங்களை கட்டியுள்ளனரா என்பதை உறுதி செய்ய, சி.சி., எனப்படும், பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று அரசு அறிவித்தது. இந்த சட்டப்படி மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்புகளை கட்டுவோர், கட்டுமான பணி நிறைவு சான்று பெற வேண்டும் என்றும் இந்தச் சான்று பெற்ற பிறகே, குடிநீர், வடிகால், மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல இடங்களில், பணி நிறைவு சான்று வாங்காமல், மின் இணைப்புகள் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மின் இணைப்பு விதிகளில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

ஆனால் விதிப்படி வீடுகளை கட்டி பணி நிறைவு சான்று கோரி உள்ளாட்சியில் விண்ணப்பித்தால், உள்ளாட்சிகள் இரண்டு வாரம் அல்லது ஒரு மாதத்துக்குள் பைசல் செய்ய வேண்டும். ஆனால், அதிகாரிகள் உரிய நேரத்தில் முடிவு எடுக்காமல் கிடப்பில் போடுவதாகவும், மக்கள் மின் இணைப்பு பெற முடியவில்லை என்றும் கட்டுமான பணிகள் முடிந்தும், வீடுகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் பறந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் சட்டம் மற்றும் ஒருங்கிணைந்த விதிகளின் கீழ் தற்போதுள்ள விதிகள் திருத்தப்பட்டுள்ளது. என்ன திருத்தம் என்றால், ஒரே கட்டிடத்தில் 3 வீடுகள் இருந்தால் அதற்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு கட்டிட முடிவு சான்று (கம்ப்ளீசன் சான்று) மின்சார வாரியத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவில் தான், தற்போது திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கட்டிட முடிவு சான்று 3 வீடுகள் மற்றும் 750 சதுர மீட்டர் வரை உள்ள கட்டிடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் கட்டிடத்தின் உயரம் 12 மீட்டர் முதல் 18.30 மீட்டர் உயரம் வரை உள்ள கட்டிடம் மற்றும் உயரம் இல்லாத கட்டிடம் என்றும், 18.30 மீட்டர் உயரத்திற்கு மேல் உயரமான கட்டிடங்கள் என்றும் என இரண்டு வகையான கட்டிடங்கள் மட்டுமே கட்ட முடியும். அதன்படி தற்போது 8 வீடுகள் வரை ஒரே கட்டிடத்தில் இருந்தாலும் அதற்கு பணி நிறைவு சான்று தேவை இல்லை. மேற்கண்ட கட்டிடங்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் மாநகர பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன் பெறுவார்கள்.

Trending News

Latest News

You May Like