மாணவர்களே ரெடியா ? நாளை வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்..! ரிசல்ட் செக் செய்வது எப்படி?

12-ம் வகுப்பு முடிவுகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வியில் சேர இந்த மதிப்பெண்கள் மிக அவசியமாக உள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தாண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி பல்வேறு பாடங்களுக்கு மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. அறிவியல் பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெற்றது.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் 09.05.2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்னரே 08.05.2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுத்தேர்வு மாணவர்கள் அதிகாரப்பூர்வ www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இவையில்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்கள் தேர்விற்கு கொடுத்த மொபைல் எண்ணிற்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.