உங்க சினிமா கனவுக்கு மக்கள்தான் பலிகடாவா?: அண்ணாமலை!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒருபுறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே? மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களைக் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “இன்றைக்கு தமிழ்நாடு தன்னுடைய உயிர்ப் பிரச்சினையான மொழிப்போரையும்- தன்னுடைய உரிமைப் பிரச்சினையான- தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டிருக்கிறது. இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, அரசின் சமூக நலத்திட்டங்கள் ஆகியவற்றை பெரிதும் பாதிக்கும் என்பதை உடன்பிறப்புகள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும் – எதற்காகவும் விட்டுதர மாட்டோம்! தமிழ்நாட்டுக்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” எனத் தெரிவித்திருந்தார்.