ஏ.ஆர். ரஹ்மான் விலகல்… புதிய இசையமைப்பாளரை அறிவித்த சூர்யா 45 படக்குழு..!
நடிகர் சூர்யா, கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’சூர்யா 44’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'சூர்யா 45' படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்.
சூர்யாவும் த்ரிஷாவும் இணைந்து மவுனம் பேசியதே, ஆறு ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தற்போது 19 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானபோதே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் விலகியுள்ள நிலையில், புதிய இசையமைப்பாளரை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'சூர்யா 45' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.
சாய் அபயங்கர், லோகேஷ் கனகராஜின் சினிமா யுனிவெர்ஸின் கீழ் உருவாகி வரும் பென்ஸ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது இவர் சினிமாவில் இசையமைக்கும் முதல் படமாகும். தற்போது பென்ஸ் படத்தை தொடர்ந்து 'சூர்யா 45'-க்கும் சாய் அபயங்கர் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.