தமிழால் மகிழ்வோம் : தமிழுக்காக நினைவுச் சின்னம் - ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு!

இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது: "தமிழ்" உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ்ச் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.
இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே முற்கால தமிழ்ச் சங்கங்களின் அர்ப்பணிப்பு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது.
ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் நினைவுச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இந்நினைவுச் சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும்.
இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம்.
இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் ஒரு நினைவுச்சின்னத்தின் மாதிரியும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் நுழைவு வாயிலில் நீயே ஒளி என எழுதப்பட்டுள்ளது. அதை சுற்றிலும் தமிழ் வாசகங்கள் மற்றும் எழுத்து வடிவங்கள் உள்ளன. அது போல் பக்கவாட்டில் தமிழ் வளம் வாழ்க எனும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. ஆரோவில் போல் வட்ட வடிவில் இருக்கும் இந்த மாதிரி சின்னத்தின் உள்ளே விளக்கு ஒளி பிரதிபலிக்கிறது.