தாம்பரம் மாநகராட்சிக்கு முதல்முறையாக ஆணையர் நியமனம்.. காத்திருக்கும் சவால்கள் !

சென்னை வேகமாக வளர்ந்தாலும் புறநகர் பகுதியான தாம்பரம் சிறிது சறுக்கலாகவே இருந்தது. இதனால் தாம்பரத்தையும் மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில், நகராட்சியாக இருந்து வந்த சென்னை தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்படுவதாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி இதற்கான அரசாணை கடந்த 4 ஆம் தேதி வெளியானது.
அரசாணை வெளியிடப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் தாம்பரம் மாநகராட்சிக்கு ஆணையர் நியமிக்கப்படாததால் உள்ளாட்சிகளில் வரி வசூலிப்பது, புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் முதல் ஆணையராக, ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாக இயக்குரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இளங்கோவன் ஏற்கெனவே செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்து வந்துள்ளார்.
தாம்பரத்தில் சாலை, பாதாள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் எந்த அளவுக்கு செய்யப்பட்டுள்ளன என்ற கேள்வியை பலதரப்பினரும் எழுப்பி வருகின்றனர். இங்கு உள்கட்டமைப்பு வசதிகள் சொல்லும்படியாக இல்லை. இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவனுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
newstm.in