உடனே விண்ணப்பீங்க..! சொந்தமாக நிலம் வாங்க ரூ.5 லட்சம் பணம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு..!
யார் யாரெல்லாம் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள், யாருக்கு தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுக்கிறது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தாட்கோ மூலம் மானியத்துடன் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டத்தில் ரூ5.00 இலட்சம் மானியத்துடன் பயன் பெறலாம். இது தொடர்பாக,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விடுவித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.
மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். விவசாய கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தின் கீழ் நிலம் வாங்க குடும்ப ஆண்டு வருமானம் மூன்று இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். வயது 18 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.
நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இந்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். விருப்பமுள்ள ஆதிதிராவிடர் பயனாளிகள் newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.