உடனே விண்ணப்பீங்க..! 10ம் வகுப்பு தகுதி போதும்; தமிழ்நாடு வனத்துறையில் வேலை..!

2025-ம் ஆண்டு அறிவிப்பின்படி, குரூப் 4 தேர்வின் மூலம் வனத்துறையில் உள்ள இப்பதவிகளுக்கான 257 காலிப்பணியிடங்கள் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு ஏப்ரல் 25-ம் தேதி வெளியானது. அதன்படி, தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணி, தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் ஆகியவற்றின் கீழ் உள்ள வனக் காப்பாளர், வனக் காவலர் ஆகிய பதவிகள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது.
பதவியின் பெயர் | நிறுவனத்தின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
வனக் காப்பாளர் | தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணி | 62 |
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் | தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணி | 35 |
வனக் காவலர் | தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணி | 71 |
வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) | தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணி | 24 |
வனக் காப்பாளர் | தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் | 15 |
வனக் காவலர் | தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் | 50 |
மொத்தம் | 257 |
வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 37 வரை இருக்கலாம். இதர பதவிகளுக்கு 18 முதல் 34 வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
- வனக் காப்பாளர் பதவிக்கு 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பதவிக்கு ஓட்டுநர் உரியம் மற்றும் கனரக வாகனங்கள் இயக்குவதில் 3 ஆண்டுக்கு குறைவில்லாத அனுபவம் தேவை.
- வனக்காவலர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியின இளைஞர்கள் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பள விவரம்
வனக் காப்பாளர் பதவிக்கு தமிழ்நாடு ஊதிய முறையின்படி நிலை 5 மற்றும் வனக்காவலர் பதவிக்கு நிலை 3-இன் படி சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வின் மூலம் மட்டுமே இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 4 தேர்வு ஒரே கட்ட தேர்வு மட்டுமே. வனத்துறை பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு உள்ளது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தகுதியானவர்கள் சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதனைத்தொடர்ந்து, மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வின் மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதல் ஒடிஆர் பதிவு செய்து பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தில் உள்ள தளர்வு குறித்து அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம். இதற்கான தேர்வு வரும் 12.07.2025 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 24.05.2025
2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 3,935 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு அறிவிப்பு வெளியாகி, தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதில் 257 காலிப்பணியிடங்கள் வனக் காப்பாளர் மற்றும் வனக் காவலர் பதவிகள் ஆகும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.