1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பிக்கவும்..! நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் உண்டு..!

1

2025-26 ஆம் ஆண்டிற்கான "கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு) 360 நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம்” கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 10 கோழிப்பண்ணை செயல்படுத்திட அரசினால் ஆணையிடப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 10 பயனாளிகளை தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்ட ஆட்சியரிடமிருந்து ஒப்புதல் பெற்று அனுப்பி வைக்கப்படும் பயனாளிகள் பட்டியலிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் இயக்குநர் அவர்களால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை, கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவினத்தில் 50 சதவீதம் மானியம் ரூ.1,65,625/- மாநில அரசால் வழங்கப்படும். திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.

ஒவ்வொரு பயனளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார் வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும். பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட/ பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2022-23, 2023-24 (ம) 2024-25 ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளோ அவர் தம் குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக் கூடாது. கட்டுமான பணிகள், தீவனம் (ம) உபகரங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் பயனாளிகளிடமிருந்து ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா அடங்கள் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

எனவே இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையை/ கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் வரும் 20.06.2025ஆம் தேதிக்குள் அதே கால்நடை மருத்துவமனை/ கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட தாலுகா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளவும்.

Trending News

Latest News

You May Like