விண்ணப்பங்கள் வரவேற்பு..! பிங்க் ஆட்டோ திட்டத்தில் சேர பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடும் வகையில் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” (Pink Auto) வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் மூன்று விதமான பயன்கள் கிடைக்கின்றன. ஒன்று, பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தப்படுவர். இரண்டு, ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது. மூன்று, பெண்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும்.
ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்கள் இருக்கும். மேலும் GPS பொருத்தப்பட்டிருக்கும். அவசர காலங்களில் புகார் பெறப்பட்ட உடன், காவல்துறை விரைவான நடவடிக்கை எடுக்க முடியும். இந்த பிங்க் ஆட்டோ பெறும் பயனாளிகளுக்கு கட்டணங்கள் ஏதுமின்றி “ஊர் கேப்ஸ்” செயலி பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.
சென்னை மாநகரில் 250 பிங்க் CNG ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் முதல்கட்டமாக பெறப்பட்டன. அதிலிருந்து தகுதியான பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினமான 08.03.2025 அன்று பிங்க் ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் CNG ஆட்டோக்கள் இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளன. தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற 06.04.2025 தேதி வரை விண்ணப்பங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் வரவேற்கப்படுகின்றன.
- பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
- கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- சென்னையில் குடியிருக்க வேண்டும்.
எந்த முகவரிக்கு விண்ணப்பம் அனுப்புவது?
சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுனர்கள், இந்த திட்டத்தின் கீழ் பயனடைவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை 600 001, சிங்காரவேலர் மாளிகை, 8-ஆவது தளத்தில் செயல்படும் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு வரும் ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.