இல.கணேசனுக்கு அளித்த சிகிச்சை குறித்து அப்பல்லோ அறிக்கை!
தமிழக பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன், சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனது இல்லத்தில் அவ்வப்போது தங்குவது வழக்கம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதால், சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, கழிவறையில் தவறி விழுந்ததில் பின்னந்தலையில் அடிபட்டதாகக் கூறப்படுகிறது. பெரிய காயம் இல்லை என தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், அடிபட்ட இடத்தில் திடீரென வலி அதிகரித்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி சென்னை க்ரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில், இல. கணேசன் அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6:23 மணிக்கு இல. கணேசன் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவர் இயற்கை எய்தியதற்கான காரணம் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருப்பதாவது; “ஆகஸ்ட் 15, 2025 அன்று மாலை 06:23 மணிக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதான இல. கணேசன் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகஸ்ட் 08, 2025 அன்று மூளைக்குள் ஏற்பட்ட ரத்தக்கசிவு மற்றும் கோமாவால் அவர் அனுமதிக்கப்பட்டார். தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவர் காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.