9ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/01174f07f452ec3b2a92110bee94a26a.jpg?width=836&height=470&resizemode=4)
போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வுபெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் வழங்கி இருந்தது.
இதனையடுத்து தொழிற்சங்கத்துடன் அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று (ஜனவரி 3) நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ், மேலாண் இயக்குநர் இளங்கோ, மாநகர மேலாண் போக்குவரத்து இயக்குநர் ஆல்வின் ஜான், அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டியு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.ஆனால் இன்று நடைபெற்ற 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதனிடையே, பொங்கலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.ஆனால் ஜனவரி 9 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.