பாஜக அதிகாரபூர்வ அறிவிப்பு : ஆந்திரா எம்.பி சீட் அண்ணாமலைக்கு இல்லையாம்..!

அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அண்ணாமலை தேசிய அரசியலில் பயன்படுத்திக்கொள்ளப்படுவார் என அமித்ஷா அப்போது உறுதி அளித்தார். இதனால் பாஜக இளைஞரணி தேசியத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. தற்போது அண்ணாமலை தேசிய பொதுக் குழு உறுப்பினர் என்ற பதவியில் உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அண்ணாமலை தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அண்ணாமலை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்படவில்லை. ஆந்திராவில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலில் பாஜக சார்பில் பகா வெங்கட சத்யநாராயணா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருன் சிங் இன்று அறிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் ஒய்எஸ்ஆர் காங்கிரசைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி விஜய்சாய் ரெட்டி பதவி விலகினார். மூன்று ஆண்டுகள் பதவிக் காலம் இருந்த நிலையில், சொந்த காரணங்களுக்காக விலகியதாக காரணம் சொன்னார். அந்த இடத்திற்கு நடைபெறும் இடைத் தேர்தலில் தான் பாஜக வேட்பாளரை அறிவித்துள்ளது.
ஆனால், விரைவில் அண்ணாமலைக்கு முக்கியமான கட்சிப் பதவியோ அல்லது மத்திய அமைச்சர் பதவியோ வழங்கப்படும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.