தி.மு.க., - பி.டி.ஏ., தலைவர் மீது அண்ணாமலை புகார்..!

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவர்கள் மூவர், ஜன., 22 மாலை, அதே பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.
கடந்த, 10ல் மாணவியின் பெற்றோர், குழந்தைகள் உதவி எண்ணில் அளித்த புகாருக்கு பின், ஆத்துார் மகளிர் போலீசார், மாணவர்கள் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்தனர். நேற்று மாணவர்களை சேலம் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
பாலியல் சீண்டல் தகவல் தெரிந்ததும், வகுப்பாசிரியர், மாணவர்கள் மூவரிடமும் நடந்த விபரங்களை எழுதி வாங்கினர். மாணவர்கள், மாணவியின் வகுப்பாசிரியர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு தகவல் தெரிந்தும், போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. ஆசிரியர்களிடம் அடுத்தகட்டமாக விசாரிக்கப்படும். இந்த விவகாரத்தை மறைக்க, உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ - மாணவியின் பெற்றோர் வாயிலாக சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் புகார் எழுந்துள்ளதால் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணமலை, நேற்று, 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவு:
ஏழாம் வகுப்பு மாணவி, அந்த பள்ளி மாணவர்களாலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து வெளியே தெரியாமல் இருக்க, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக உள்ள, தி.மு.க.,வைச் சேர்ந்த ஜோதி, 20 நாட்களாக போலீசில் புகார் அளிக்காமல் தடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்திருக்கிறார்.
வேறு வழியின்றி, மாணவியின் பெற்றோர், குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்த பின்பே, போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் அளிப்பதை தடுத்து தாமதப்படுத்திய, ஜோதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுதும் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிகள் உள்ளன. இதை தடுக்கவோ, பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவோ நடவடிக்கை இல்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்போது தான் துறை தொடர்பான பணிகளை மேற்கொள்வார்? இவ்வாறு பதிவிட்டுள்ளார்.