அண்ணா யூனிவர்சிட்டி பிரச்சனை! தமிழகம் முழுவதும் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய கோரி போராட்டம்!

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரியும், மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை பறிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் பேசிய மாநில செயலாளர் பாரதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களின் 69 சதவீத இடஒதுக்கீடு கேள்விக் குறியாகும். மாணவர்கள் மூலமாக நிதி திரட்டி கொள்ளையில் ஈடுபடுவதற்கான முயற்சியை சூரப்பா மேற்கொள்கிறார். அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தன்னிச்சையாக செயல்பட்ட சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது எனவும், ஆளுநர் அதிகார வர்க்கத்தின் ஆட்சியை அமல்படுத்த முயற்சிப்பதாகவும், பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்கிறது எடப்பாடி அரசும் மாநில உரிமையை காவுக்கொடுப்பதாக குற்றம்சாட்டினர்.
பல்கலைக்கழக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு மாநில அரசும் அடிபணிந்து கொண்டிக்கிறது இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என அப்போது பேசினார்.