1. Home
  2. தமிழ்நாடு

அந்தமான் சென்ற விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியதால் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு..!

1

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் வழக்கமாக அதிகாலை 5:05 மணிக்கு  சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும். ஆனால் அந்த விமானம் இன்று காலதாமதமாக பகல் 8: 50 மணிக்கு 159 பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இருந்து புறப்பட்டு சென்றது.

அந்த விமானம் இன்று மதியம் அந்தமான் வான்வெளியை நெருங்கிய போது, அந்தமான் தீவில் தரைக்காற்று வீச தொடங்கி மோசமான வானிலை நிலவியது. அந்தமானில் வழக்கமாக மாலை 4 மணிக்கு மேல் தான் தரைக்காற்று வீச தொடங்கும். அந்த நேரத்தில் அந்தமானில் இருந்து, விமானங்கள் புறப்படவோ, தரை இறங்கவோ அனுமதி கிடையாது.

ஆனால் இன்று தரைக்காற்று முன்னதாக பிற்பகலிலேயே   வீச தொடங்கியதால், சென்னையில் இருந்து அந்தமான் சென்ற, ஏர் இந்தியா விமானம், அந்தமானில்  தரை இறங்க முடியவில்லை. இதனால் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது.இதை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், ஏர் இந்தியா விமானத்தை தொடர்பு கொண்டு, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை அடுத்து ஏர் இந்தியா விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து இன்று மாலை 2:30 மணி அளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது. விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும், நாளை காலை மீண்டும் விமானம் அந்தமான் புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா கவுன்டரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் மற்ற விமானங்கள், வழக்கம் போல் அந்தமானில் தரை இறங்கி விட்டு, மீண்டும் சென்னைக்கு வருகிறது. ஆனால் ஏர் இந்தியாவுக்கு மட்டும் எப்படி மோசமான வானிலை? என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் விமான நிறுவன அதிகாரிகள் உங்கள் பாதுகாப்பு நலன் கருதி தான், மோசமான வானிலை இருந்த மண்ணில் தரை  இறக்காமல், இங்கு கொண்டு வந்து விட்டோம். நாளை காலை மீண்டும் அந்தமான் அழைத்து  செல்கிறோம் என்று கூறி சமாதானப்படுத்துகின்றனர். பயணிகள் அப்படி என்றால் சென்னையில் எங்களுக்கு தங்குவதற்கு இடவசதி ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

உள்நாட்டு விமான பயணிகளுக்கு இட வசதி செய்து கொடுப்பது கிடையாது என்று கூறி, சமரசம் செய்து அனுப்பி வைக்கின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை பெரும் பரபரப்பு நிலவியது.

Trending News

Latest News

You May Like