1. Home
  2. தமிழ்நாடு

அன்புமணி ராமதாஸ் கேள்வி : சமூக நீதியை அழித்துவிட்டு விடுதிகளுக்கு சமூக நீதி என பெயர் வைப்பதா?

1

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இனிமேல் இவை ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: சமூக நீதி என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பயன்படுத்துவதை விட பெரிய கொடுமை மற்றும் முரண்பாடு இருக்க முடியாது. வாழும் காலத்தில் ஒருவரை கொடுமைக்கு உள்ளாக்கி படுகொலை செய்து விட்டு, அவரது கல்லறையில் பெயரை பொறிப்பது எப்படியோ, அப்படித்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகளும் உள்ளன.

தமிழகத்தில் சமூக நீதியை ஒட்டு மொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூக நீதி சமூக நீதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதி காண்பித்தால் அது இனிக்காது என்ற அடிப்படை கூட முதல்வருக்கு தெரியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், சமூக நீதியை காக்க தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தியாவில் கர்நாடகம், பீகார், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்ட நிலையில், தற்போது வரை, தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி சமூக நீதி கடமையை தட்டிக்கழித்து வருகிறார்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 1,193 நாள்கள் ஆகிவிட்டது. ஆனால், தற்போது வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதேபோல, சமூக நீதி கோரும் பிற சமுதாயங்களுக்கும் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்து வருகிறது திமுக அரசு. சமூக நீதி என்பது மிகவும் புனிதமான சொல். அதை நீங்களும், உங்களை போன்றவர்களும் உச்சரித்து கொச்சைப்படுத்தாமல் இருங்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like