மாநில முதல்வர்களுக்கு பறந்த முக்கிய கடிதம்..! "கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க அழைப்பு"

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கான முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்,ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு கடதம் எழுதியுள்ளார்.
அதில், இந்தியாவில் 1952, 1963 மற்றும் 1973-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. எனினும், 1976ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் 42-வது திருத்தத்தின்படி, மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடித்ததால், 84வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக 2026 க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை இது நீட்டிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தாமதமானதால், தொகுதி மறுவரையறை - முதலில் 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்டது - எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே நடைபெறக்கூடும் எனத் தற்போது தெரியவருவதாகவும்,
அதனால் மாநில நலன்களைப் பாதுகாக்க மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தொகுதி மறுவரையறை நடக்குமா என்பதல்ல கேள்வி, ஆனால் அந்த மறுவரையறை எப்போது நடக்கும், அப்படி நடக்கும்போது, இந்திய நாட்டின் முன்னுரிமைத் திட்டங்களுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய மாநிலங்களின் செயலுக்கு மதிப்பளிக்கப்படுமா என்பதுதான் கேள்வி. 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிப்புக்குள்ளாகும் என தெரிவித்துள்ளார்.
நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல என்றும்; தங்கள் தேசியக் கடமைகளை நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இந்த தொகுதி மறுவரையறை அமைந்து அதன்மூலம், அம்மாநிலங்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாக அமைந்துவிடும் என்பதற்காகத்தான் நாங்கள் எதிர்ப்பதாகவும் தமது கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினை தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது என்று தாம் நம்புவதாகவும், கூட்டாட்சி கொள்கை என்ற நம்முடைய அடிப்படையான தத்துவத்தைப் பாதிப்படையச் செய்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், இப்பிரச்சினையின் அரசமைப்புரீதியான, சட்ட மற்றும் அரசியல்ரீதியான பரிமாணங்களை நாம் ஒன்றாக இணைத்து ஆராயவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் அதற்கான தீர்வுகளை நாம் இணைந்து உருவாக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக ஒரு கூட்டு ஆலோசனை மற்றும் ஒருங்கிணைந்த விவாதங்கள் மூலம் மட்டுமே, சதவீத அடிப்படையில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழக்காமல் நாட்டின் முன்னேற்றத்தைக் கட்டியெழுப்புவதில் நமது பங்கை உறுதியளிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செயல்முறையைப் செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக, பின்வரும் இரண்டு கோரிக்கைகளை விடுத்துள்ளார் :
(i) தெற்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா; கிழக்கில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா; வடக்கில் பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் (JAC) சேர தங்களின் முறையான ஒப்புதல்.
(ii) கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் தங்கள் கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமித்தல்.
மேற்குறிப்பிட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் கட்டமாக, மார்ச் 22, 2025 அன்று சென்னையில் ஒரு தொடக்கக் கூட்டத்தை நடத்த தாம் முன்மொழிவதாகவும், நமது கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தத் தருணத்தில் தங்களது ஒத்துழைப்பைக் கோருவதாகவும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நமது கூட்டு நன்மைக்காகவும், வளர்ச்சிக்கான சரியான ஆதாரங்களைப் பெறுவதற்கும், கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த முக்கியமான கொள்கைகளில் மாநிலத்தின் பங்களிப்பை அளிப்பதற்கும்,
நமது பொருளாதார முன்னுரிமைகள் தேசிய அளவில் உரிய கவனம் பெறுவதை உறுதி செய்வதற்கும், நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும், மார்ச் 22, 2025 அன்று சென்னையில் தங்கள் வருகையை எதிர்பார்ப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.