1. Home
  2. தமிழ்நாடு

துணை முதலமைச்சர் உதயநிதியை பார்த்து அமித்ஷாவுக்கு பயம் - ஆ.ராசா எம்.பி..!

Q

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி பிரதமராக முடியாது, உதயநிதி முதல்வராக முடியாது என்று திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூறினார். "ஸ்டாலின் தனது மகனை முதல்வராக்குவது ஒரே ஒரு திட்டம் மட்டுமே வைத்திருக்கிறார், சோனியா காந்தியும் தனது மகனை பிரதமராக்குவது ஒரே ஒரு திட்டம்தான். ஆனால் நான் இருவருக்கும் சொல்ல விரும்புகிறேன். ராகுல் காந்தி பிரதமராகவோ அல்லது உதயநிதி முதல்வராகவோ ஆக முடியாது. இரண்டு இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி உறுதி என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு ஆ. ராசா எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் : திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் கூறிய உரையில் புதியதாய் எதுவும் இல்லை; பழைய குற்றச்சாட்டுகளையே மீண்டும் மீண்டும் கூறிச் சென்றார்.

“மோடி திருக்குறளின் வழி ஆட்சி நடத்துகிறார்” என அவர் பேசியது கேலிக்குரியது. உண்மையில் திருவள்ளுவர் இருந்திருந்தால், பொய்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒன்றிய அரசைச் சாடியிருப்பார். திருக்குறள் – “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” என்ற அடியை அமித்ஷா படித்திருந்தால், பொது மேடையில் பொய்யுரைகள் பேச முடியாது.

தமிழக மக்களின் வாக்குகளைப் பெற திருக்குறளை பயன்படுத்தும் முயற்சி வாக்கு திருட்டையே ஒத்ததாகும். அதிக வரி வசூலித்து மக்களை சுரண்டுவது கொள்ளையனின் செயலுக்கு இணையானது என்பதைத் திருவள்ளுவர் தெளிவாகச் சொல்கிறார். ஜி.எஸ்.டி. மூலம் மக்களை சுரண்டும் பாஜகவுக்கு திருக்குறளைச் சொல்வதற்கே தகுதி இல்லை.

சோனியா காந்திக்கு ஒரே கனவு, ராகுல் பிரதமர் ஆக வேண்டும்; திமுகவுக்கு உதயநிதி முதல்வர் ஆக வேண்டும். இரண்டுமே நடக்காது” என்ற அமித்ஷாவின் விமர்சனம், அவரின் சொந்தக் குடும்ப அரசியலை மறைக்க முடியாது. ஜெய்ஷா எவ்வாறு இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளரானார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். தமிழ்நாட்டில் யார் முதல்வராக வேண்டும் என்பதை அமித்ஷா தீர்மானிக்க முடியாது; அதை மக்கள் மட்டுமே முடிவு செய்கிறார்கள்.

130வது சட்டத்திருத்தம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரான “கருப்பு சட்டம்”. எதிர்க்கட்சிகளை அடக்கி, மாநில அரசுகளை பலவீனப்படுத்தும் பாஜகவின் பாசிச முயற்சிதான் இது. அதற்கு எதிராக தமிழக முதல்வர் எழுப்பிய கண்டனக் குரலே அமித்ஷாவை அச்சத்தில் ஆழ்த்தி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தது.

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசும் அமித்ஷாவே, முன்னர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிகளை “மிகப்பெரிய ஊழல் ஆட்சி” என கூறியவர். இன்று அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்து “திமுக ஊழல் கட்சி” எனச் சொல்வது இரட்டை வேடம் அல்லவா? ரஃபேல் விமான முறைகேடு, தேர்தல் பத்திர ஊழல், சிஏஜி சுட்டிக்காட்டிய கோடி கணக்கான ஊழல்கள் பாஜக அரசின் மேல் இருப்பதை மக்கள் மறக்கவில்லை.

தமிழகத்திற்கு திட்டங்கள் எதுவும் வழங்காமல், சமஸ்கிருதத்துக்கு நிதி, கீழடி அகழாய்வை மறுக்கும் கொள்கை, மீனவர்களின் பிரச்சனையைத் தீர்க்கத் தவறும் நிலை ஆகியவை பாஜகவின் தமிழுக்கு எதிரான முகத்தை வெளிப்படுத்துகின்றன.

தமிழக மக்கள் அனைத்தையும் புரிந்துகொண்டுள்ளனர். 2026 தேர்தலில் பாஜகவையும், அதிமுகவையும் மக்கள் ஓட்டில் தோற்கடித்து விரட்டுவார்கள். எத்தனை மிரட்டல்களும், பொய்யுரைகளும் வந்தாலும், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பாஜக வெற்றி பெற முடியாது

Trending News

Latest News

You May Like